பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.
`அவற்றையே பின்னர் பாணினி முனிவர்க்கும், அகத்திய முனிவர்க்கும் செப்பஞ் செய்யுமாறு உணர்த்தி, உலகில் பரவச்செய்தான்` என்க. `வடமொழிக்கு இந்திரனால் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமே முதல் நூல்` என்றல் பழங்கதையேயாக, உண்மையில் உள்ளது பாணினீயமே. அதனால்,
``வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்``
-காஞ்சிப்புராணம்
என்றலே சிவநெறி மரபு என்க.
பலதலைப்பட்ட உணர்வுடையராய்ப் பரந்துசென்று ஆராயும் உலகர் பொருட்டு ஆரியமொழியும், அவ்வாறன்றி ஒருதலைப்பட அமைந்த உணர்வுடையராய் ஒழுக்கத்தில் நின்று பயன்பெற விரும்பும் நல்லோர் பொருட்டுத் தமிழ்மொழியுமாக இருமொழியை இறைவன் சொல்லியருளினான் என்பது,
``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்`` -தி.10. பா.26
என நாயனார் மேலே அருளிச்செய்தவாற்றால் பெறப்படும். இவ்வாறு இவ்விருமொழியையும் ஒப்பக்கொண்டதன்றி ஒன்றை உயர்ந்ததாகவும், மற்றொன்றைத் தாழ்ந்ததாகவும் ஆன்றோர் கொண்டிலர் என்பது இதனால் பெறப்பட்டது. இங்ஙனமாகவும் சிலர் இவற்றுள் ஒன்றைப் பற்றி மற்றொன்றனை இகழ்வர். அவர், இது முதல் மூன்று திருமந்திரங்களை, `நாயனார் வாக்கல்ல` என விலக்கிச் செல்வர். அவர், ``தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர`` (தி.1 ப.77 பா.4) ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (தி.6 ப.23 பா.5) என்றாற் போல்வன வற்றையும் அவ்வாறு விலக்கிப்போவர் போலும்!
மொழிகளது நிலை, `நுண்மை, பொதுமை, இடைமை, பருமை` என நான்கு வகைப்படும். அவை முறையே, `சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி` என வடமொழியிற் சொல்லப்படும். அவற்றுள், `மத்திமை, வைகரி` எனப்படுகின்ற இடைமொழி பரு மொழிகள் தாம் ஆரியம், தமிழ் முதலிய பாகுபாடுகளைப் பெற்று நிற்கும். அவற்றிற்கு முந்திய நிலைகள் பாகுபாடின்றியே விளங்கும். அவற்றுள் பிரணவர் முதலியோரும் அனந்த தேவரும் ஆகமங்களைப் பெற்றது `சூக்குமை` எனப்படும் நுண்மொழியினாலாம். சீகண்டர் பெற்றது `பைசந்தி` என்னும் பொதுமை மொழியால். சீகண்டரிட மிருந்து நந்தி முதலிய கணங்கள், தேவர், முனிவர், சித்தர் பெற்றது இடைமொழியாகிய மத்திமையினால். அவர்களிடமிருந்து மக்கள் பெற்றது `வைகரி` எனப்படும் பருமொழியினால். `சிலர்க்கு இயல் பாகவே மெய்யுணர்வு உண்டாயிற்று` என்றல் இறைவன் உள்நின்று நுண்மொழி இடைமொழிகளால் விளக்கியதே என்க. அதனால், கணங்கள் முதலியோர் பொருட்டே பாகுபட்ட மொழிகளை இறைவன் சொல்லினன்` எனக் கொள்க. இவற்றுள், இடைமொழிக்கு (மத்தி மைக்கு) முற்பட்டவற்றையே, ``சொற்பிரிவிலாத மறை`` (தி.3 ப.78 பா.2) என்று திரு ஞானசம்பந்தர் அருளிச் செய்தார். அதற்கு இவ்வாறு பொருள் கொள் ளாது `சொற்கள் நீங்காது நிற்கின்ற மறை` என உரைப்பின் பொருள் படாமை அறிக. ``எழுதா மறை`` எனப்படுவதும் இச்சொற்பிரிவிலாத மறையே. அதனையே ஆரிய வேதத்திற்கு மரபாகக் கொண்டனர் அந்தணர். `எழுதா மறை` என்பதற்கு, `எழுத வாராத மறை` என்பதே பொருளன்றி, `எழுதாமல் இருப்பதையே மரபாகக் கொண்ட மறை` என்பது பொருளாகாது.
``ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றிஉரைத் தேட்டின் புறத்தெழுதார்`` -திருவள்ளுவமாலை. 15
என்ற செய்யுளும், `எழுதப்படுவதனை எழுதாதிருக்கின்றனர் அந்தணர்` என்றே கூறிற்று. எனவே, `எல்லையிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை` (தி.12 பெ.பு.ஞானசம். 75) என்பதில், `எழுது மறை` என்றது, `சொற்பிரிவிலாத மறையைத் `தமிழ்` என `ஒரு மொழியாய்ப் பிரிந்து தோன்றி எழுதப்படுமாறு வைத்த மறை` என்றவாறாயிற்று.
இதனால், மேலுலகத்தில் பிரணவர் முதலியோர்க்குச் சொல்லிய ஆகமங்கள் கீழுலகத்தார்க்கு விளங்குதற்பொருட்டு இறைவன் பருமொழிகளைப் படைத்தமை கூறப்பட்டது. `ஆகமங்கள் விளங்குதற்பொருட்டே மொழிகளைப் படைத்தான்` என்றமையால், அம்மொழிகளில் அவ்வாகமங்களை அவன் கூறினமையும் பெறப்படும்.
``மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்``
-தி.8 திருவாசகம். கீர்த்தி. 9. 10
``கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்
துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்``
-தி.8 திருவாசகம் கீர்த்தி. 16. 20.
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுதே
தெள்ளும் வாய்மையின் ஆகமத் திறனெலாந் தெரிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகைஆ ளுடையாள்.
-தி.12 பெ. பு. திருக்குறிப்பு. 50.
என்றாற்போல வருவன பலவும் சிவபெருமான் தனது ஆகமங்களைப் பருமொழியால் விளக்கிய வரலாற்றைக் குறிப்பனவேயாம். இறைவன் படைத்த பருமொழியை இந்நாயனார், `ஆரியம், தமிழ்` என இரண்டாகக் கூறினமையின், ஆகமங்கள் அவ் இருமொழியிலும் கூறப்பட்டன என்றல் பொருந்துவதே என்க. இதனானே, பிறநெறிகள்யாவும், `ஆரியம் ஒன்றே கடவுள்மொழி; தமிழ் முதலிய பிறமொழிகள் யாவும் தேசியம் - அஃதாவது அவ்வந் நிலப்பகுதியில் வாழும் மக்கட்கு அமைந்த மொழி` என்னுமாயினும், சிவநெறி, ஆரியம் தமிழ் இரண்டையுமே கடவுள்மொழி என ஒப்பக்கொள்வது என்பது பெறப்பட்டது. இந்நாயனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பின் பிறர் சிலரும் இவ்வாறு கொண்டனர்.